பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி வெறுமனே ஒரு பொதுபோக்காக மட்டும் இல்லாது, ஒரு சமூகத்தின் உளவியலை ஆய்வும் செய்யும் நிகழ்ச்சியாகக் காணப்படுகிறது. தெரிந்தோ, தெரியாமலோ இவ்வாய்வில் பலர் பங்கெடுப்பது இதன் சிறப்பம்சம்.
பிக் பாஸ் போட்டியாளர்கள் தங்களின் பண்புகளையும் நடத்தையையும் வெளிப்படுத்துகிறார்கள். இதனைப் பார்ப்பவர்கள் அது சரியல்ல, இது பிழையல்ல என விமர்சனம் செய்கிறார்கள்.
அங்கு ஒருவர் அநியாயமாக நடத்தப்படும்போது, இங்கு பலர் கொந்தளிக்கிறார்கள். இதனை மேலோட்டமாகப் பார்க்கும்போது, அங்குள்ள சிலர் கெட்டவர்கள் போலும் இங்குள்ள பலர் நல்லவராகவும் சமூக அக்கறை கொண்டவராகவும் தென்படலாம்.
ஆனால், இது உண்மையல்ல. மற்றவரின் பிழையைப் பெரிதாகவும், தன் பிழையை கண்டுகொள்ளாத உளவியல் நடத்தைதான் இங்கும் காணப்படுகிறது. அங்கு உள்ளவர்களைவிட மிக மோசமானவர்கள் எம்மிடையே உள்ளனர். அங்கு அவர்களைக் ஒளிப்பதிவுக் கருவி கண்காணிக்கிறது. நம்மைக் கண்காணிக்கவில்லை.
அங்கு கெட்ட வார்த்தை பயன்படுத்துகிறார், ஆபாசமாக உடையணிந்துள்ளார் என்று பல குற்றச்சாட்டுக்களைச் சுமத்தும் நீங்கள், அவர்களைத் திட்டித்தீர்க்க மிகவும் கேவலமாக நடந்து கொள்கிறீர்களே. இந்த சமூகத்தில் இல்லாததா அங்கு உள்ளது.
அங்கு அடக்குமுறை, அதர்மம், அநியாயம் நடக்கிறது எனக் கெதித்தெழும் நாம் ஏன் ஊழல் அரசியல்வாதிகள், சமூக விரோதிகள் போன்றோர் மீது எம் கோபத்தைக் காட்டுவதில்லை. அங்கு கை வைத்தால் எம் தலை போகும் என்ற பயத்தில் உள்ளோம் அல்லவா?
அரண்மனையை ஒட்டி வசித்த பிச்சைக்காரன் ஒருவன், அந்த அரண்மனைக் கதவில் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பைக் கண்டான்.
அதில், மன்னர் விருந்தளிக்கப் போவதாகவும், அரச உடை அணிந்து வருவோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
பிச்சைக்காரன், தான் அணிந்திருந்த கந்தல் உடைகளை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்துக்கொண்டான்.
நிச்சயமாக அரசரும், அவருடைய குடும்பத்தினரும் மட்டுமே ராஜ உடை உடுத்தியிருக்க முடியும் என எண்ணினான்.
திடீரென அவனுக்குள் ஓர் எண்ணம்… அந்த மாதிரி எண்ணுகிற அளவுக்குத் தனக்குள் ஏற்பட்ட துணிச்சலைப் பற்றி யோசித்த போதே, அவனுக்குள் நடுக்கம் ஏற்பட்டது.
இருந்தாலும், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, அரண்மனை வாசலை அடைந்தான்.
வாயிற்காவலனிடம், ”ராஜாவைப் பார்க்க வேண்டும்” என்றான். அந்தக் காவலன், அரசரிடம் அனுமதி வாங்கி வந்தான்.
உள்ளே வந்த பிச்சைக்காரனிடம், ”என்னைப் பார்க்கவேண்டும் என்றாயாமே?” என்றார் அரசர்.
”ஆமாம்! நீங்கள் அளிக்கும் விருந்தில் கலந்துகொள்ள எனக்கும் ஆசை.
ஆனால், என்னிடம் ராஜ உடைகள் இல்லை. என்னை அதிகப்பிரசங்கி என நினைக்காவிட்டால், உங்களது பழைய ஆடையை அளித்து உதவினால், அதனை அணிந்து கொண்டு விருந்துக்கு வருவேன்” என்றான் மிகவும் பவ்வியமாக.
அதே நேரம், மன்னர் என்ன சொல்வாரோ என நடுங்கியபடி, அவரையே பார்த்துக் கொண்டிருந்தான்.
ஆனால் மன்னர், அவனுக்கு ராஜ உடை ஒன்றை வழங்கினார். அந்த உடையை உடுத்திக் கொண்டவன், கண்ணாடி முன் நின்று கவனித்தான்; தோற்றத்தில் கம்பீரம் மிளிர்வதைக் கண்டு வியந்தான்!
அப்போது மன்னர் அவனிடம், ”விருந்தில் கலந்து கொள்வதற்குத் தகுதி உடையவனாகி விட்டாய்.
அதைவிட, முக்கியமான ஒன்று…
இனி உனக்கு வேறெந்த உடையும் தேவைப் படாது.
உன் ஆயுள் முழுவதும் இந்த உடை அப்படியே இருக்கும். துவைக்கவோ தூய்மைப் படுத்தவோ அவசியம் இருக்காது” என்றார்.
கண்ணீர்மல்க, மன்னருக்கு நன்றி கூறி விட்டுக் கிளம்ப யத்தனித்தவன்,
மூலையில் கிடந்த தனது பழைய ஆடைகளைக் கவனித்தான்.
அவனது மனம் சற்றே சலனப்பட்டது.
‘ஒருவேளை, அரசர் கூறியது தவறாக இருந்து, இந்த உடைகள் கிழிந்து விட்டால்… அப்போது நமக்குப் பழைய உடைகள் தேவைப்படுமே?!’ என யோசித்தவன், சட்டெனச் சென்று தன் பழைய உடைகளை வாரிக் கொண்டான்.
வீடு வாசல் இல்லாத அவனால் பழைய துணிகளை எங்கேயும் வைக்க முடியவில்லை; எங்கே போனாலும் பழைய ஆடைகளையும் சுமந்தே திரிந்தான். மன்னர் அளித்த இரவு விருந்தையும் அவனால் மகிழ்ச்சியாக ஏற்க முடியவில்லை.
அடிக்கடி கீழே விழுந்து விடும் பழைய துணிகளைச் சேகரிக்கும் மும்முரத்தில், பரிமாறப்பட்ட பதார்த்தங்களைச் சரிவர ருசிக்க முடியவில்லை.
அரசர் சொன்னது உண்மை என்பது நாளடைவில் அவனுக்குப் புரிந்தது.
அவர் கொடுத்த ஆடை அழுக்காகவோ, கிழியவோ இல்லை. ஆனாலும், அந்த யாசகனுக்குப் பழைய உடைகள் மீது நாளுக்கு நாள் பிடிப்பு அதிகமானது.
மக்களும் அவனது ராஜ உடையைக் கவனிக்காமல், அந்த கந்தல் மூட்டையையே பார்த்தனர்.
அவனைக் ‘கந்தல் பொதி கிழவன்’ என்றே அழைத்தனர்.
இறக்கும் தருணத்தில் இருந்த அவனைப் பார்க்க, அரசர் வந்தார்.
அவனது தலைமாட்டில் இருந்த கந்தல் மூட்டையைப் பார்த்து, அரசரின் முகம் சோகமாவதைக் கண்டான்.
ஆரம்பத்திலேயே அரசர் சொன்ன செய்தி நினைவுக்கு வந்தது.
பழைய துணி மூட்டை, அவனது வாழ்நாளின் மொத்த மகிழ்ச்சியையுமே பறித்து விட்டது.
அந்த யாசகனிடம் மட்டுமல்ல, நம் எல்லோரிடமும் அப்படியொரு மூட்டை இருக்கிறது.
அதனுள் விரோதம், கோபம், கவலை, சோகம், பகைமை… எனப் பல பெயர்களில் வேண்டாத பொருட்கள் இருக்கின்றன.
அவற்றைப் பாதுகாப்பதிலேயே கவனம் செலுத்துவதால், நமது வாழ்வில் வீசுகின்ற மகிழ்ச்சித் தென்றலை நுகர முடியாமல் இருக்கிறோம்.
நம்முடைய தீராத கோபம், எத்தனை இன்பம் வந்தாலும், அதை ஏற்றுக் கொண்டு ஆனந்தப்பட முடியாமல் செய்து விடுகிறது.
அரண்மனைகளில்
கூட, இன்றும் பலர் பிச்சைக்காரர்களாகவே வாழ்கின்றனர்.
அனாதை ஆஸ்ரமங்களில் அரசர்களாக வாழ்வோரும் உண்டு.
மனதில் இருக்கிறது மகிழ்ச்சி.
வாழ்க்கை தினமும் நமக்கு புதுத் துணிகளை நெய்து தருகிறது.
நமக்கோ, பழைய துணிகளில் ஒரு நூலைத் தூக்கி எறியவும் மனமில்லை.
நம் வீடுகளில், என்றோ வாங்கிய பல பொருள்கள் நிரம்பி இருக்கின்றன.
அவற்றால் எந்தப் பயனும் இல்லாவிட்டாலும், தூக்கி எறிய மனமில்லை.
வீட்டையே குடோனுக்கு இணையாக மாற்றிக் குடித்தனம் நடத்துபவர்களும் இருக்கின்றனர்.
இல்லத்தை மட்டுமல்ல, உள்ளத்தையும் குடோனாக்கி பழைய சரக்குகளைப் பத்திரப்படுத்தினால், அவற்றின் அழுகல் நாற்றம் உதடுகளின் வழியே சொற்களாகவும் கரங்களின் வழியே செயல்களாகவும் வெளிப்பட்டு வேதனையையே விநியோகிக்கும்; வெளிச்சத்தை வழங்காது.
மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணங்கள் தேவையே இல்லை.
குறிப்பு: இது முகநூல் பதிவு ஒன்றில் இருந்து எடுக்கப்பட்டது.
கடைசியாக, அந்தத் தந்தை உலக வங்கியின் தலைவரிடம் சென்றார்.
தந்தை: என்னிடம் உலக வங்கியின் உபதலைவராக பரிந்துரைக்கக் கூடிய ஒரு வாலிபன் உள்ளார்.
தலைவர்: ஏற்கெனவே என்னிடம் தேவைக்கு அதிகமான உபதலைவர்கள் உள்ளனர்.
தந்தை: ஆனால், இந்த வாலிபன் பில்கேட்சின் மருமகன்.
தலைவர்: ஓ! அப்படியானால் எனக்குச் சம்மதம்.
படிப்பினை:
இதுதான் வியாபார உத்தி. உங்களிடம் எதுவுமே இல்லையென்றாலும், நீங்கள் எதையும் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால், உங்கள் அணுகுமுறையும் மனோபாவமும் கட்டாயம் உறுதியானதாக இருக்க வேண்டும்.
சங்ககாலப் புலவர் நக்கீரன் என்பவர் பண்டைய பாண்டிய நாட்டிலுள்ள மதுரையில் வாழ்ந்தவர் என்றும், இவர் “இயற்கையிலேயே பெண்களின் கூந்தலில் வாசனையுண்டா” என்ற விவாதத்தின்போது சிவனையே எதிர்த்தவர் என்ற தொன்மக்கதை உள்ளது.
நெற்றிக்கண் என்பது சிவனின் நெற்றியில் செங்குத்தாக இருக்கும் கண் என்பது இந்து சமய நம்பிக்கை. மூடப்பட்டிருக்கும் இக்கண் கடும் கோபத்தின்போது திறக்கப்படும் என்றும், அதனால் நெருப்பு வெளிப்படும் என்றும், அது அழிக்கக்கூடியது என்றும் குறிப்பிடப்படுகின்றது.
இது மூன்றாவது கண் என்றும் அழைக்கப்படும். இது ஞானக்கண் என்ற கருத்தும் உள்ளது.
குறிப்பிட்ட விவாதத்தின்போது சிவன் தன்னுடைய நெற்றிக்கண்ணை திறந்தபோது, புலவர் நக்கீரன் அதற்கு அஞ்சாது நியாயத்தை எடுத்துச் சொல்வதில் உறுதியாக இருந்தார்.
இன்றைய அறிவியல் உலகில் இச்சம்பவம் உண்மையா என்ற வினாவை எழுப்பலாம். உண்மை, உண்மையில்லை என்ற விவாதத்திற்கு அப்பால் இச்சம்பவத்தின் படிப்பினை சிறந்த கருத்தியலைத் தருகின்றது.
சுய நலம், சுய இலாபம் என்பவற்றுக்காக பலர் உண்மையை மறுதலிக்கவும், பிழையைச் சரியென்று ஏற்றுக் கொள்ளும் போக்கு உள்ளது. அநியாயம் நியாயமாக்கப்படுவதும், நியாயத்தின் மீது குற்றம் சுமத்தப்படும் போக்கும் இன்றைய நடைமுறையில் சாதாரணமாகிவிட்டது.
தொன்மக் கதையாயினும், வரலாற்றில் புலவர் நக்கீரர் நினைவு கொள்ளப்பட அவரின் அஞ்சாமைக்கு அப்பால், அவர் நியாயத்தின் பக்கம் நிலை நின்றது சிறப்பிடம் பெறுகின்றது. சோக்கிரடீசின் மரணம், சேகுவேராவின் உறுதி போன்றவை காலம் காலமாக மதிக்கப்படுவதும் நேசிக்கப்படுவதும் அவர்கள் அநியாயத்திற்குத் துணை போகமல் மரணம் வரை நியாயத்தின் பக்கம் நின்றதேயாகும்.
தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247 இல் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன. அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவையாவன பின்வருமாறு:
அ = எட்டு
ஆ = பசு
ஈ = கொடு, பறக்கும் பூச்சி
உ = சிவன்
ஊ = தசை, இறைச்சி
ஏ = அம்பு
ஐ = ஐந்து, அழகு, தலைவன், வியப்பு
ஓ = வினா, மதகு
கா = சோலை, காத்தல்
கூ = பூமி, கூவுதல்
கை = கரம், உறுப்பு
கோ = அரசன், தலைவன், இறைவன்
சா = இறப்பு, மரணம், பேய், சாதல்
சீ = இகழ்ச்சி, திருமகள்
சே = எருது, அழிஞ்சில் மரம்
சோ = மதில்
தா = கொடு, கேட்பது
தீ = நெருப்பு
து = கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு
தூ = வெண்மை, தூய்மை
தே = நாயகன், தெய்வம்
தை = மாதம்
நா = நாக்கு
நீ = நின்னை
நே = அன்பு, நேயம்
நை = வருந்து, நைதல்
நொ = நொண்டி, துன்பம்
நோ = நோவு, வருத்தம்
நௌ = மரக்கலம்
பா = பாட்டு, நிழல், அழகு
பூ = மலர்
பே = மேகம், நுரை, அழகு
பை = பாம்புப் படம், பசுமை, உறை
போ = செல்
மா = மாமரம், பெரிய, விலங்கு
மீ = ஆகாயம், மேலே, உயரம்
மு = மூப்பு
மூ = மூன்று
மே = மேன்மை, மேல்
மை = அஞ்சனம், கண்மை, இருள்
மோ = முகர்தல், மோதல்
யா = அகலம், மரம்
வா = அழைத்தல்
வீ = பறவை, பூ, அழகு
வை = வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்
வௌ = கௌவுதல், கொள்ளை அடித்த
குட்டி ஒட்டகத்திற்கும் தாய் ஒட்டகத்திற்கும் இடையில் நடந்த உரையாடல் கற்பனையாக இங்கு தரப்படுகிறது. இந்த ஒட்டகத்தின் கதை சூழ்நிலையால் நீங்கள் கட்டப்பட்டவரா, நீங்கள் இருக்க வேண்டிய இடம் எது போன்ற கேள்விகளால் விழிப்புணர்வைத் தருகிறது.
“அம்மா, நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா?” “நிச்சயமாக, கேள் மகனே.”
“ஏன் எங்களுக்கு இந்த கூன் முதுகு பெரிதாக வளைந்து இருக்கிறது.” “நாம் பாலைவன மிருகங்கள். ஆகையால், இது எங்களுக்கு நீரைச் சேகரித்து வைப்பதற்கு உதவுகிறது. நீர் இல்லாவிட்டால் நாம் உயிர்வாழ முடியாது.”
“சரி, அப்படியென்றால் ஏன் எமது கால்கள் நீளமாகவும், பாதங்கள் வட்டமாகவும் இருக்கின்றன?” “உண்மையிலேயே எனைய விலங்குகளைவிட நாம் பாலைவனத்தில் அதிகம் நடப்பதற்கும், ஆபத்து ஏற்படாமல் இருப்பதற்குமே அவ்வாறு இருக்கின்றன.”
“ஏன் எங்களுக்கு நீளமான இமைகள் இருக்கின்றன? சிலவேளை அவற்றைப் பார்ப்பதற்கு எனக்குச் சங்கடமாக இருக்கிறன.” “அந்த கடினமான, நீளமான இமைகள் உனது கண்களை பாலைவனக் காற்று மற்றும் தூசுகளில் இருந்து பாதுகாப்பதற்குப் பிரயோசனமானது.”
“ஓ, அப்படியா! அப்படியென்றால் கூன் முதுகு பாலைவனத்தில் இருக்கும்போது தண்ணீர் சேமிக்கவும், கால்கள் பாலைவனத்தில் பாதுகாப்பாக நடக்கவும், அத்துடன் நீண்ட இமைகள் பாலைவன மணல் காற்றிலிருந்து பாதுகாக்கவுமே பயன்படுகிறது, அப்படித்தானே?” “ஆம், மகனே.”
“இன்னும் ஒரேயொரு கேள்வி அம்மா…” “கேள், மகனே.”
“அப்படியென்றால், எந்த மடையன் எங்களைக் கொண்டு இந்த மிருகக் காட்சிச்சாலைக்குள் அடைத்து வைத்தது?”
அறிவு, திறன், மனப்பாங்கு, அனுபவங்கள் எல்லாமே பொருத்தமான இடத்தில், சந்தர்ப்பத்தில்தான் உபயோகமானது. அவ்வாறெனில், நீங்கள் எந்த இடத்தில் இருக்கின்றீர்கள்? பொருத்தமான இடத்தில் இருக்கிறீர்களா? அல்லது அறிவு, திறன், மனப்பாங்கு, அனுபவங்கள் போன்றவற்றை பயன்படுத்த முடியாத, சூழ்நிலையால் அடைக்கப்பட்ட இடத்தில் இருக்கிறீர்களா?