ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்த கண் பார்வையற்றவர் தான் இரவில் செல்லும் நேரங்களில் எல்லாம் தன்னுடன் ஒரு எரியும் விளக்கையும் எடுத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
ஒரு நாள் இரவில் வழமைபோல் எரியும் விளக்குடன் அவர் சென்று கொண்டிருக்கும்போது, அவர் சென்ற வழியில் சிலர் வந்து கொண்டிருந்தனர்.
வந்தவர்களில் ஒருவன் கண் பார்வையற்றவரிடம் குறும்புத்தனம் செய்ய விரும்பினான். ஆகவே, அவன் “நீங்கள் ஏன் எரியும் விளக்குடன் செல்கிறீர்கள்? உங்களுக்குத்தான் கண் தெரியாதே?” எனக் கேட்டான்.
கண் பார்வையற்றவர் அமைதியாக, “இந்த விளக்கு எனக்காக அல்ல, உங்களைப் போல் கண் பார்வையுள்ளவர்களுக்கானது. நீங்கள் கண் பார்வையற்றவரைக் கவனியாது, அவரைத் தள்ளி, விழச் செய்யாமல் இருப்பதற்காகவே நான் இதை கொண்டு செல்கிறேன்” என்றார்.
பதிலைக் கேட்ட அவர்கள் வெட்கம் அடைந்து, அவரிடம் மன்னிப்புக் கேட்டு, அவ்விடம் விட்டு அகன்றனர்.
கருத்து:
- பேசு முன் இரு தடவைகள் யோசி.
- ஒரு செயலுக்குப் பின் பொருள் இருக்கும் என்பதால், முன் அனுமானம் எப்போதும் ஏற்றதல்ல.